Health Care:அதிகாலையில் எழும் நல்ல பழக்கத்தைப் போலவே, மூன்று வேளை உண்பதைத் தவிர்ப்பது என்ற பட்டினி மருத்துவம் மூலம் மனித உடலில் கழிவு அகற்றும் வேலை இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டே உள்ளது. நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் இருந்து நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதைப் போல, அந்த உணவுப் பொருட்களின் மிச்சத்தைத் திட மற்றும் நீர்க் கழிவுகளாக நம் உடல் வெளியேற்ற சிறுநீரகம், கல்லீரல், தோல், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் பிறந்ததிலிருந்து ஒரு நொடி கூடி ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும். இந்த உடல் உறுப்புகளை, நாம் கரிசனத்துடன் கையாள வேண்டும். அதன் இயக்கங்களுக்கு ஓரளவிற்கு ஒய்வு தர வேண்டும். நாக்கு ருசிக்கு மட்டுமே முன்னுரிமை தந்து, இவை உடல் நலத்திற்குக் கேடானவை, கழிவு நிறைந்தவை எனத் தெரிந்தே பல உணவுகளை திணித்து குடல் இயக்கத்திற்கு கேடு செய்கிறோம். நச்சு நிறைந்த உணவை உண்பதால் உடல் பாதிப்படைகிறது. நம் வீட்டில் கழிவுநீர் தொட்டி நிறைந்து தூர்நாற்றம் ஏற்படுவது போல குடல் கெட்டு, அழுகி, மலம் தங்கி நாற்றமெடுக்கிறது. இதைச் சரிசெய்ய விரதம், பட்டினி போடுவது, உபவாசம் போன்ற முறைகளை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள்.ஓய்வில்லாமல் உழைக்கும் கல்லீரல், மண்ணீரல் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு ஓய்வு தருவது அறிவுடைமை. பன்றி போல தொடர்ந்து உண்டு உடலைக் கெடுப்பதைவிட, அளவாகவும் பசிக்கும்போதும் மட்டுமே பண்ண வேண்டும். இதை வள்ளுவர்,
அற்ற தறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து(குறள் 944)
என்பார். நாம் உண்ட உணவு செரித்த பிறகே, நல்ல பசி எடுக்கும்போது மட்டுமே நாம் உண்பதை ஒரு நெறியாகக் கொண்டு வாழ வேண்டும் என்று மற்றொரு குறளில் அறிவுறுத்துகிறார்.
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயளவு இன்றிப் படும்.
இதில், செரிக்கும் அளவு தெரியாமல் உண்ணுபவனுக்கு நோய்கள்(குடல் நோய் உள்ளீட்ட அனைத்து நோய்களும்)உண்டாகும் என்று எச்சரிக்கை செய்கிறார். இந்தக் குறள்கள் வழியே அளவான உணவு, செரிமானம் ஆன பின்பு உண்ணுக என்ற கருத்துக்களை ஆழமாகப் பதியச் செய்கின்றார்.
வாரத்தில் ஒரு நாள் எந்த வித உணவும் சாப்பிடாமல் வயிற்றைப் பட்டினி போடா வேண்டும். பசித்தால் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம். பகல் முழுவதும் இப்படிப் பட்டினியாக நாம் இருந்தால், நம் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள், குடலுக்கு எந்த உணவும் வராது என்பதை உணர்ந்து கொண்டு, கழிவுகளை அகற்றும் வேலைகளைத் தொடங்கிவிடும். அடுத்த நாள் காலையில் கழிவுகள் வெளியேறி உடல் நல்ல சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இலகுத் தன்மையுடன் இருக்கும். பட்டினி இருந்துவிட்டு, உடனடியாக திட உணவுகளைச் சாப்பிடக் கூடாது. மறுநாள் காலையில் நீராகாரமோ புழுங்கல் அரிசி கஞ்சியோ(திரவ உணவுகளையே) எடுத்துக் கொள்ள வேண்டும். பிற்பகல் மதிய உணவில் களி போன்ற பாதி திட உணவுகளைச் சாப்பிட வேண்டும். தேவைப்படும் போது தண்ணீர்க் குடித்துக் கொள்ளலாம். இரவில் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.
இப்படிக் காலை முதல் தொடங்கி இரண்டாம் நாள் இரவு வரை இரண்டு நாள்கள் பட்டினி போடும் உணவு முறையைப் பின்பற்றினால், உடலில் இதுவரை படிந்துள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். இது மருந்தில்லா மருத்துவம். பட்டினி மூலம் உளவியல் கட்டுப்பாடு ஏற்பட்டு, உடலைப் பற்றிய பொதுவான நல்ல அறிவுப்பூர்வமான கண்ணோட்டம் உருவாகும். இது நம் வாழ்நாளை நோயில்லா நாள்களாக மாற்றி விடும்.


0 Comments