Constipation:மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நாவின் ருசிக்கேற்ப மூக்கு பிடிக்க உண்டு கடைசியில் மலம் மந்தப்படும் போது, மனமும் மந்தப்பட்டு விடுகிறது. அதாவது, மன ஓட்டமும் தடைப்பட்டு விடுகிறது. தினசரி மல ஜலம் குறைவில்லாமல் கழிக்கும் மனிதனே ஆரோக்யமானவன் என்று கூறப்படுகிறது. அவனுடைய உடல் தெளிவானால் மனத்தெளிவு தானே அமையும். அவனால் தெளிவாய்ச் சிந்திக்க முடியும். செயல்படவும் முடியும்.
மலசிக்கல் ஏன்?எப்படி?
நாம் உண்ணும் உணவில் அளவுக்கு அதிகமாய் மாவுப்பொருட்கள், புளிப்பு உணவுகள்,துவர்ப்பு உணவுகள் சேரும் பொழுது மலசிக்கல் உண்டாக ஆரம்பித்து விடுகிறது. எனவே இவற்றை தவிர்த்தல் வேண்டும்.அதிக அளவில் அரிசி உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், ரசம் மற்றும் கடலைமாவில் தயாரித்த பஜ்ஜி, வாழைப்பூ போன்றவற்றை அளவோடு சேர்த்து மலச்சிக்கலில் இருந்து விடுபடுவது சிறந்ததாக இருக்கும்.
தொடர்ந்து வரும் மலச்சிக்கலே பல்வேறு நோய்களின் படிக்கல்லாய் அமைகிறது. கீழ் கண்ட நோய்கள், மலச்சிக்கலால் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- தொடரும் மலச்சிக்கலால், உடம்பில் வாயு மிகுந்து, வயிறு உப்ப ஆரம்பிக்கலாம்.
- மலச்சிக்கலால் பசியின்மை ஏற்பட்டு, இரத்தக் குறைவு நோய்(Anemia) உண்டாகலாம்.
- நீடித்த மலச்சிக்கல் குடற்புண் நோய்க்குக் காரணமாகலாம்.
- நாள்ப்பட்ட மலச்சிக்கலால் குடல்வால் நோய்(Appen-Dicitis)உண்டாகலாம்.
- மலச்சிக்கலே மூலநோய்க்கு(Piles) முன்னுரையாய் இருக்கும்.
- தாமதித்த மாதவிடாய் ஏற்பட, மலச்சிக்கலும் காரணமாகலாம்.
- மலச்சிக்கலால் உறவு வேட்கை, உடல் இச்சை அதிகமாகலாம்.
- வாய் நாற்றம், உடல் நாற்றம் மலச்சிக்கலால் உண்டாகலாம்.
நீ உன்னையே மாற்று:
முதலில் மனிதன் தன் உண்ணும் பழக்கத்தை மாற்ற வேண்டும். மூன்று வேலையும் சமைத்த உணவுகளையே உண்ணும் மனிதன் ஒரு வேளையாவது இயற்கை உணவுகளை உண்ண வேண்டும். இயற்கை உணவியில் அளவான அளவில் உப்புச் சுவையும்,ஓரளவு காரசுவையும், பெருமளவு நார்ச்சத்தும் உள்ளதால், மலம் தாராளமாய்ப் பிரியும். மலசிக்கலற்ற நிலையில் எந்நோயும் உடனடியாகக் கட்டுப்படும்.
மலச்சிக்கலை நீக்க மருந்துகள் தேவையில்லை. உங்கள் உணவைச் சீர்படுத்துங்கள். மலச்சிக்கல் தானே மறையும். மலச்சிக்கலை உடனடியாக நீக்க இயற்கை உணவுகளே மிகச் சிறந்த உணவாகும்.
மலச்சிக்கலை நீக்கும் பொடுதலை துவையல்
- சுத்தம் செய்த பொடுதலை - 1கைப்பிடி
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 3 பற்கள்
- புளி - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
பொடுதலையைத் தேவையான அளவு எண்ணெயில் இட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, புளி சேர்த்து அரைத்து, தேவையான அளவில் உப்பு சேர்த்துப் பயன்படுத்தவும். இத்துவையல் உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலை ஓட ஓட விரட்டும்.
கொய்யா சாலட்
- ஓரளவு பழுத்த காய்- 3 எண்ணிக்கை(150 கிராம்)
- வாழைப்பழம் - 1
- ஓமத்தூள் - 5 கிராம்
- ஏலக்காய் தூள் - 3 சிட்டிகை
- திராட்சை பழச்சாறு - 200 மி.லி
முதலில், திராட்சையைச் சாறெடுத்து, அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து, பின்னர் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் கொய்யாப்பழத்தைச் சிறுதுண்டுகளாக அரிந்து இத்துடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.
இதை இரவு உணவுக்குப் பின் 50 கிராம் அளவில் சாப்பிட மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும். உடல் பருமனைத் குறைக்க விரும்புபவர்கள், இதனை இரவு உணவாகக் கொண்டால் ஒரே மாதத்தில் மிகச் சிறந்த பலனைப் பெறலாம்.
கலப்பு கீரை சூப்
- அகத்துக்கீரை - ஒரு கைப்பிடி
- வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
- ஓமம் - 5 கிராம்
- மிளகு - 5 கிராம்
- சீரகம் - 5 கிராம்
- பூண்டு - 5 பற்கள்
- காய்ந்த மிளகாய் - 3 எண்ணிக்கை
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயம் - தேவையான அளவு
- தண்ணீர் - அரை லிட்டர்
உப்பு, பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவில் உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்பசம், குடற்புண் போன்றவை தீரும்.
கடுக்காய் ஊறுகாய்
- கொட்டை நீக்கிய கடுக்காய் - அரை கிலோ
- புளித்த மோர் - ஒன்றரை லிட்டர்
- பெருங்காயத்தூள் - 50 கிராம்
- இந்துப்புத்தூள் - 100 கிராம்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு வாரம் வரை வெயிலில் வைக்கவும். பின்னர், கடுக்காயை மட்டும் தனியாக எடுத்து, குறைந்த அளவில் காரம், எண்ணெய்ச் சேர்த்து பத்திரப்படுத்தவும். இந்த ஊறுகாயில் இரண்டு துண்டுகள் இரவு உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். மலச்சிக்கல் தானே நீங்கும்.

Social Plugin