Natural Beauty and Health Care: மூன்று வேலையும் சமைத்த உணவு வகைகளையே ருசித்து அடிமைப்பட்டுப் போன நாவிற்கு இயற்கை உணவுகள் ருசிக்குமா...?கண்டிப்பாய் ருசிக்கும்.அது எப்படி.....?
சித்திரமும் கைப்பழக்கம்;செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே அதுபோல், முதலில் இயற்கை உணவுகளை உட்க்கொள்ள மனதளவில் தயாராகுங்கள். சமைத்த உணவுகளுக்கும், இயற்கை உணவுகளுக்கும் உள்ள வேறுபாட்டினை ஒப்பிட்டு பாருங்கள். சமைத்த உணவுகளில் சத்துக்கள் வீணடிக்கபடுகின்றன. மேலும், உணவு சமைக்கப்படுவதால், அவற்றை நம் ஜீரண உறுப்புகள் கூட முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக சமைத்த உணவில் உள்ள பெரும்பாலான சத்துக்கள், கழிவுகளாகவே வெளியேற்றப்படுகின்றன. இதனாலேயே, மனிதனுக்கு இரும்புசத்துக் குறைவதனால் ஒரு நோய்...சுண்ணாம்புச் சத்து குறைவதனால் ஒரு நோய்...புரத சத்து குறைவதால் ஒரு நோய்...என நோய்கள் பலவிதமாய் மனித உடலை ஆட்டுவிக்கிறது. அதனால் இயற்கை உணவுகளே என்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இயற்கை உணவுகள் சமைத்த உணவைவிட மிகவும் பயன் தரக்கூடியன. இயற்கை உணவுகளில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இரத்தத்தில் சிவப்பணுக்களைப் பெருக்கி, உடம்புக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதில் இதற்க்கு இணை ஏதுமில்லை. இயற்கை உணவுகள், இரத்தத்தில் கலந்துள்ள கார்பன் மூலக்கூறுகளை மிக விரைவாக வெளியேற்றி, இரத்தத்தில் பிராண சக்தியை அதிகரிக்கிறது.
ஒரு காயைச் சமைத்தாலோ அல்லது எண்ணெயிலிட்டு வருத்தாலோ அதில் கார்பன் மூலக்கூறுகள் மிகுந்து விடுகின்றன. இது நாக்குக்குச் சுவை உணர்வு தரும். ஆனால் உடல் ஆரோக்யத்துக்கு வில்லன். பழக்கத்துக்கு அடிமைப்பட்டுவிட்ட மனித தேகம் நித்தம் ஒரு ருசியில் திளைத்து, கடைசியில் நோயில் வீழ்ந்து விடுகிறது.எது இரத்தத்தைச் சுத்திகரிக்கிறதோ, எது இரத்தத்தில் பிராண சக்தியை அதிகரிக்கிறதோ அதுவே மிகச் சிறந்த உணவாகும்.
இயற்கை உணவுகளில், பழங்கள், பச்சை காய்கறிகள், கீரைவகைகள், உலர்ந்த தானியங்கள் மூலிகை வகைகள் ஆகியவையே பெரும்பங்கு வகிக்கின்றன.
பச்சைக்காய்கறிகள் மூலம் இயற்கை உணவுகள் கீழ்க்கண்டவாறு தயார் செய்யலாம்.
புடலங்காய் பச்சடி: புடலங்காய் 200 கிராம் அளவில் எடுத்து, சுத்தம் செய்து, சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். சாம்பார் வெங்காயம் இரண்டு, பச்சைமிளகாய் இரண்டு கொத்தமல்லி இலை தேவையான அளவு இவைகளையும் சேர்த்துச் சிறிதாக அரிந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சைப்பழத்தை முழுவதும் பிழிந்து, ஒரு கப் தயிர் சேர்த்து, சிறிது மிளகு, உப்பு சீரகம் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். பச்சடி தயாராகி விட்டது. காலை உணவாக இந்தப் பச்சடியைத் தொடர்ந்து உண்டு வர, உஷ்ண வியாதிகள் அனைத்தும் உடனே தீரும்.
இதைப்போல் பாகற்காய், கோவைக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெங்காயம், அவரைப்பிஞ்சு, செளசெள, காரட், வெள்ளரிக்காய், வெள்ளைப்பூசணி, மாங்காய், இஞ்சி ஆகியவற்றையும் மேற்கண்ட முறைப்படி பச்சடியாகச் செய்து, உட்க்கொள்ளலாம்.
கலப்புக் காய்கறிப் பச்சடி: இதுவும் இயற்கை உணவில் எளிதானதும், சுவையானதும் ஆகும். உதாரணமாக, காரட், பீட்ருட், கோவைக்காய், முள்ளங்கி, ஆகிய நான்கையும் தேவையான அளவில் எடுத்து, கழுவி, சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். இத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்த்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவில் கலந்து கொள்ளுங்கள். கருவேப்பிலை, புதினா, மல்லி இலை, பூண்டு, ஆகியவற்றைக் கலந்து, பச்சடி தயார் செய்து உட்கொள்ளலாம். உடலுக்குச் சிறந்த நோய் எதிர்ப்புத் திறன் தரும் உணவுகளில் இதுவும் ஒன்று.
ஆரோக்கியம் தரும் காரட் கீர்
- காரட் - 200 கிராம்
- தேங்காய் துருவல் - ஒரு மூடி
- தேன் - 50 மி.லி.
- ஏலக்காய் - இரண்டு
- வெள்ளை மிளகு - 20 எண்ணிக்கை
- மல்லி இலை - கைப்பிடி அளவு
காரட்டைக் கழுவிச் சுத்தம் செய்து துருவலாக்கவும். தேங்காயைத் துருவி, காரட்டுடன் சேர்த்து, ஏலக்காய், வெள்ளைமிளகு, மல்லி இலை, தேவையான அளவில் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்து வடிகட்டவும். இந்த காரட் கீரைத் தொடர்ந்து பருகிவர, இளைத்த உடலைப் பருகச் செய்யும்.
வெள்ளரி - முக்கால் கிலோ, தேன் - 100 மி.லி. மல்லி இலை - கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்கவும். இதைப் பருகி வர உடல் உஷ்ணம், குடற்புண், வயிற்றுக்கிருமி நோய் தீரும்.
இதேபோல், முட்டைக்கோஸ், காரட், வெண்பூசணி, வாழைத்தண்டு போன்றவற்றைத் தேன் சேர்த்துத் தயாரித்து உண்ணலாம்.
காரட் சாறு:புற்று நோய், கண் வியாதிகள், உடல் சூடு, குடற்புண் ஆகியவற்றை நீக்கும்.
வெண்பூசணிச்சாறு:மாதவிடாய் வலி, அதிக ரத்தப்போக்கு, வாய்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
வாழைத்தண்டுச்சாறு: சிறுநீரக வியாதி, மூல நோய்கள், மூட்டு வலி, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
கோஸ் சாறு: இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.
கொத்தமல்லிச் சாறு: தோல்வியாதிகள், பசியின்மை தீரும்.
கருவேப்பிலைச் சாறு: பித்த நோய்கள், சர்க்கரை வியாதி தீரும்.
வெந்தையக் கீரைச் சாறு: சர்க்கரை வியாதி, குடற்புண், மூட்டுவலி, உடல்பருமன், அதிக கொழுப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
மணத்தக்காளி கீரைச்சாறு: மூட்டுவலி, மாதவிடாய்க் கோளாறு, குடற்புண், மலச்சிக்கல் ஆகியன குணமாகும்.
மேற்கண்ட சாறுகளை இயற்கை உணவாகக் கொள்ள விரும்புபவர்கள், தங்களது உணவில் அவல் உணவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- சிவப்பு அவல்(கார் அவல்) - 100 கிராம்
- தேங்காய்த் துருவல் - 20 கிராம்
- வெல்லத் தூள் - 50 கிராம்
- ஏலக்காய் - 4
- வெள்ளை மிளகு 10 எண்ணிக்கை
தேங்காய்த் துருவலைத் தண்ணீர் விட்டு அரைத்துப் பால் எடுத்து; அதில் அவலை ஊறவைத்து, ஏலக்காய், வெள்ளை மிளகு ஆகியவற்றைத் தூளாக்கிச் சேர்த்து, சுவையாகச் சாப்பிடலாம். இதனால் சமைத்த உணவைச் சாப்பிடவில்லையே என்ற ஏக்கம் நீங்கும். உடல் பொலிவு பெறும்.
பேரிச்சை கீர்
- பேரிச்சை(கொட்டை நீக்கியது) - 100 கிராம்
- தேங்காய் - ஒரு மூடி(துருவல்)
- ஏலக்காய் - இரண்டு
- மிளகு - இரண்டு
- மல்லி இலை - ஒரு கைப்பிடி
- தேன் - 50 மி.லி.
அனைத்தையும் ஒன்று கலந்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பக்கூடியது. சளி, இருமல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஆகிய குறைபாடுகள் தீரும்.
சரி; பல ஆண்டு காலம் சமைத்த உணவையே சாப்பிட்டு சாப்பிட்டுப் பழகிப் போய்விட்டோமே? அதிலிருந்து எப்படி மாறுவது? அதற்க்குப் புதிய தண்ணீரை ஊற்றுவதற்கு முன் பழைய தண்ணீர் இருந்த பாத்திரத்தைச் சுத்தப்படுத்துவது போல், சமைத்த உணவு வகைகளைச் சாப்பிட்டு அசுத்தமாகிப் போய்க் கிடக்கும் நமது உடலைச் சுத்திகரிக்க வேண்டும்.
அது சாத்தியப்படாத சமாச்சாரம் இல்லை.
தினமும் ஒரு ரூபாய் வீதம் 48 நாள் செலவு செய்தால் போதும். நீங்கள் புதுமனிதராக ஆகிவிடுவீர்கள்!

0 Comments